டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் செயல்பட்டன.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, டெல்லி செங்கோட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கக்கூடும் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மும்பை போலீசார் அதை டெல்லி போலீசாருக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, டெல்லி போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவு மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செங்கோட்டை வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகள், நுழைவாயில்கள், பாதுகாப்பு வளாகங்கள் மற்றும் முக்கிய இடங்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்டன. பல மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்?! என்னதான் இறுதி முடிவு? டெல்லி பறக்கும் தமிழக அதிகாரிகள்!

இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித தளர்வும் காட்டாமல், சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மிரட்டல் விடுத்த நபர் யார், எந்த இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அழைப்பின் விவரங்கள், தொலைபேசி இணைப்பு மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் காரணமாக செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டிக்கு வந்த இந்த மிரட்டல், பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் ஒருமுறை உஷார்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு