குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இவர்களில் ரஞ்சிதா கோபக்குமார் என்ற செவிலியரும் ஒருவர்.

கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா கோபக்குமார். 2019ம் ஆண்டில் கேரளா சுகாதார துறையில் நர்ஸ் பணி கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் நிலை கருதி, ஐந்தாண்டுகள் லீவு எடுத்து, ஓமன் நாட்டிலும், இங்கிலாந்திலும் நர்ஸ் ஆக பணியாற்றினார்.
இதையும் படிங்க: அசால்ட் அக்யூஸ்ட்.. கேட்கப் போனா அரெஸ்ட்! இவங்கள நம்புனா அவ்வளவுதான்.. ஆவேசமான இபிஎஸ்!
இப்போது ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கேரள அரசு பணியில் சேர முடிவு செய்தார். அதற்காக, ஒரு வாரத்துக்கு முன் கேரளா வந்தார். அரசு மருததுவமனையில் நர்ஸ் பணியில் சேருவதற்கான கடிதம் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளை செய்து முடித்தார். இங்கிலாந்துக்கு சென்று லண்டன் மருத்துவமனையில் ரிலீவிங் ஆடரை வாங்க, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இண்டியா விமானத்தில் புறப்பட்டார். ஆனால், விமானம் விபத்துக்குள்ளாகி ரஞ்சிதா பலியானார்.
ரஞ்சிதா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரி்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் கருதி அரசு வேலைக்கு நீண்டநாள் விடுப்பு போட்டு, வெளிநாட்டு வேலையில் சேர்ந்தார்.கேரள சட்டத்தில் அதற்கு வழியுண்டு என்பதால் ரஞ்சிதா அந்த வழியை பயன்படுத்தினார்.

ஆனால், காசர்கோட் மாவட்டத்தில் உள்ள வெள்ளரிகுண்டு நகர துணை தாசில்தார் பவித்ரன், ரஞ்சிதாவை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு போட்டார். நாயர் சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவை ஜாதிரீதியாக கடுமையாக விமர்சித்தார்.
அரசு வேலையில் மக்களுக்கு சேவை செய்யாமல் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடியவர் என்றும், ரஞ்சிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாகவும் செக்ஸ் ரீதியாகவும் பவித்ரன் விமர்சித்தார். அகால மரணமடைந்த ரஞ்சிதாவுக்கு பல தரப்பில் இருந்தும் இரங்கல்கள் தெரிவித்து வரும் நிலையில், பவித்ரனின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அவருக்கு எதிராக, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாதர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன. அவரை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்தன.
இதை அறியாத பவித்ரன் வழக்கம் போல் நேற்று அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார். அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து, காசர்கோடு கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டார். பவித்ரன் தொடர்ந்து இதுபோல அதிகாரிகளைப் பற்றியும், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பற்றியும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அவர் அரசு பணியில் நீடிக்க தகுதி இழந்து விட்டார். நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசுக்கும் கலெக்டர் பரிந்துரைத்தார்.
வெள்ளரிகுண்டு தாசில்தார் முரளியிடம் சஸ்பெண்ட் ஆணையை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு பவித்ரன் சென்று கொண்டிருந்தார். அவர் வீடு போய் சேருவதற்குள் நடுவழியிலேயே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: சார் ப்ளீஸ் வாங்க... பரபரக்கும் கனடா! பிரதமர் மோடி அரசு முறை பயணம்..!