தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ம.தி.மு.க.வின் இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க.வுடன் இணையலாம் என துரை வைகோ முதல்வர் விஜய்க்கு யோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் விஜய் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நான்கு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அணி மாறின. இந்தக் கட்சிகள் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. இதனால், “தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது” என துரை வைகோ தன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், திருச்சி சென்ற முதல்வர் விஜயை துரை வைகோ சந்தித்துப் பேசினார். கடந்த 4-ம் தேதி அவரது இல்லத்திலும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின்போது துரை வைகோ, “நீங்கள் சொன்னால் உடனே எங்கள் இரு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி உங்களுடன் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம்” எனக் கூறியதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மதிமுகவை முடித்துக்கட்ட திட்டமிடும் மு.க.ஸ்டாலின்?! கட்சி தாவ தயாராக இருப்பவர்களுக்கு க்ரீன் சிக்னல்!

ஆனால் முதல்வர் விஜய் இந்த யோசனையை ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ள நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர். இந்நிலையில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்தால் “குதிரை பேரம்” விமர்சனம் மேலும் அதிகரிக்கும். மேலும் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என முதல்வர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
எனினும் ம.தி.மு.க. அரசியல் வியூக வகுப்பாளர்கள், இரு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்து கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகின்றனர். துரை வைகோ தரப்பில் மன உளைச்சல் அதிகம் இருப்பதாகவும், அமைச்சரவை இடம் கிடைக்காத ஏமாற்றம் இந்த யோசனைக்கு காரணம் எனவும் த.வெ.க. வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமா? நிர்பந்தமா? வைகோ, துரை வைகோ பேச்சால் திமுக அப்செட்!