பலோத்ராவில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவிலேயே முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக, பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் வரவிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகமாகும். ₹79,450 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMTPA) சுத்திகரிப்புத் திறனைக் கொண்டுள்ளது.
ஒரு நவீன, ஒருங்கிணைந்த அலகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், ஆண்டுக்கு 2.4 மில்லியன் டன் பெட்ரோலிய வேதிப்பொருள் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளது. இது கச்சா எண்ணெயை உயர் மதிப்புள்ள பொருட்களாக மாற்ற உதவுகிறது. 17.0 என்ற நெல்சன் சிக்கல் குறியீடு மற்றும் 26%-க்கும் அதிகமான பெட்ரோலிய வேதிப்பொருள் விளைச்சலுடன், இது மேம்பட்ட சுத்திகரிப்பு மற்றும் செயல்திறனுக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது.
இதையும் படிங்க: “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!
இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட பலோத்ராவில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டிற்கு அர்ப்பணிக்கவிருந்தார்.
இந்நிலையில் இந்த வளாகத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் பிரிவு அமைந்திருந்த பகுதிக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பிரதமரின் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!