இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முக்கிய சோதனை ஒன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்பட்ட ஏர்டிராப் சோதனையை இஸ்ரோ குழுவினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இந்த சோதனையின் வெற்றிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த இஸ்ரோ குழுவினருக்கு எனது பாராட்டுகள். இந்த சோதனை, திட்டத்தின் தயார் நிலையை நோக்கிய முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு குரூப் கேப்டன்கள் – சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகியோர் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முக்கிய பகுதியே ஏர்டிராப் சோதனை ஆகும்.
இதையும் படிங்க: மாம்பழம் சின்னம் வழக்கு!! ராமதாஸுக்கு தொடர் சறுக்கல்!! மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

ஏர்டிராப் சோதனை என்பது, விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விண்கலம், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் முக்கிய சோதனை முறையாகும். இந்த சோதனையின் வெற்றி, ககன்யான் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறுவதை உறுதிப்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவின் இந்த சாதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் பாராட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!