குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:38 மணிக்கு 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ஏறக்குறைய 10 நிமிடங்களில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானம் போயிங் 787-8 ரகத்தைச் சேர்ந்தது என கூறப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டது.
இதையும் படிங்க: 23 நொடியில் எல்லாம் முடிஞ்சுது….விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் அதிர்ச்சி தகவல்!

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசிய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை என்று தெரிவித்து உள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் இப்போது முழுமையாக கவனம் செலுத்துகின்றன. கூடுதல் ஆதரவை வழங்க ஏர் இந்தியாவின் பராமரிப்பாளர்கள் குழு இப்போது அகமதாபாத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...