இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணி, 50 ஓவர் உலககோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. ஆண்கள் அணி 1983-ல் கபில்தேவ் தலைமையில், 2011-ல் தோனி தலைமையில் வென்றது போல, இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
நவி மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, நாடு முழுவதும் கொண்டாட்டக் களமாக்கியது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அணி வீராங்கனைகள், நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். அங்கு நடந்த உரையாடல், வெற்றியின் உற்சாகத்துடன் சிரிப்பும் இணைந்தது. உலககோப்பையை பிரதமரிடம் வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சந்திப்பு, வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடவில்லை. பிரதமர் மோடி, வீராங்கனைகளிடம் வெற்றியின் ரகசியம் கேட்டு, அவர்களின் உழைப்பைப் பாராட்டினார். அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல், பிரதமரின் முகத்தைப் பார்த்து சிரித்தபடி கேள்வி எழுப்பினார்:
இதையும் படிங்க: 12 மாவட்ட மக்களே உஷார்..!! வெளுக்கப்போகுது மழை..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??
"எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் முகம் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறது? உங்கள் தினசரி சருமப் பராமரிப்பு என்ன?" இந்தத் திடீர் கேள்வி, அறையை சிரிப்பலையால் நிரப்பியது. பிரதமர் மோடியும் சிரித்துக்கொண்டே, "இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்று பதிலளித்தார். அப்போது, ஆல்-ரவுண்டர் ஸ்நேகா ரானா குறுக்கிட்டு, "நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை இப்படி பிரகாசிக்க வைக்கிறது" என்று கூறினார்.

இதைக் கேட்டு மீண்டும் பேசிய பிரதமர் மோடி, உருக்கமாகக் கூறினார்: "நிச்சயமாக, அதுதான் உண்மை. இது எனக்கு ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன். இவை அனைத்தையும் மீறி, ஆசிர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது."
இந்த உரையாடல், வீராங்கனைகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், "2017-ல் உங்களை சந்தித்தோம், அப்போது கோப்பை வெல்லவில்லை. இப்போது உலக சாம்பியன்கள். இன்னும் பலமுறை உங்களை இதேபோல் சந்திக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். தொடர் நாயகி தீப்தி சர்மா, தனது ஹனுமான் டாட்டூவைப் பற்றி பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்த சந்திப்பு, மகளிர் கிரிக்கெட்டின் உயரத்தை மீண்டும் உணர்த்தியது. பிரதமர் மோடி, வீராங்கனைகளின் மன உறுதி, சமூக ஊடகங்களில் ஏற்பட்ட டிரோலிங்கைத் தாண்டி வென்றதைப் பாராட்டினார். அணியினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர். இந்த வெற்றி, இளம் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் என பிரதமர் உறுதியளித்தார். இந்தியாவின் கிரிக்கெட் அன்பு, ஆண்-பெண் அணிகளுக்கு இடையே இன்னும் வலுவடைந்துள்ளது.
இதையும் படிங்க: உலகளவில் நாமதான் டாப்பு! கெத்துக்காட்டிய அமலாக்கத்துறை! எப்.ஏ.டி.எப்., பாராட்டு!