இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சில் மூன்றாம் நபர் தலையீடு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பியது, ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கான புதிய விசா நடைமுறை உள்ளிட்டவை குறித்து, நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்தார். இது குறித்து ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சு என்பது, ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது பற்றியும், அந்த பகுதிகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்ததுமாக மட்டுமே இருக்கும்.

இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது. ஏற்கனவே பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். பயங்ரவாதமும், வர்த்தகமும், அமைதிப் பேச்சும் ஒரு சேர நடக்காது. தண்ணீரும், ரத்தமும் ஒரு சேர பாயாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் நிறுத்தி வைப்பு விவகாரத்தில் எதுவும் பேச முடியாது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இன்னும் பலமான அடி கொடுத்திருக்கலாம்! ஏன் விட்டு வைத்தோம் தெரியுமா? ராஜ்நாத் சிங் விளக்கம்..

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை நம் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில், இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை, அமெரிக்காவில் இருந்து 1080 பேர் நம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் தான் அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நலனில் நம் அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. வெளிநாட்டு பல்கலைகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எளிதாக விசா பெறவும், அங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேரவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்கானிஸ்தான் உடனான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், அந்நாட்டு மக்களுக்கு ஆறு விதமான விசாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக, அவர்களுக்கு உதவி புரிபவர்களுக்காக, படிப்பதற்கு, தொழில் புரிய, ஐநா துாதர்கள் மேலும் என்ட்ரி விசா என்ற ஆறு பிரிவுகளின் கீழ் விசா வழங்கும் நடைமுறை ஏப்ரல் 29ம் தேதி முதல் துவங்கியது என ஜெய்ஸ்வால் கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இப்படி பண்ணலாமா? சசி தரூர் செயலுக்கு வலுக்கு எதிர்ப்பு.. ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக..!