ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு, இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. “இந்தியா எதையும் மறக்காது” என்ற அந்த பதிவு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதோடு, நாட்டின் பாதுகாப்பு குறித்த உறுதியையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த பகுதியின் சுற்றுலா துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தாறுமாறாக குறைந்தது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor) என்ற ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதால், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா அடிச்ச அடி!! எழ முடியாமல் தவிக்கும் பாக்.,! விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!
இந்த சம்பவம் நடந்தது நாளையுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவின் மூலம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை இந்திய ராணுவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நினைவு நாள், உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!