ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் பஹல்காம் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்த அரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பஞ்சாபைச் சேர்ந்த விதவை குஜாலா உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ உள்ளிட்ட இந்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்தன. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர். செக்யூரிட்டி முதல் தொழிலதிபர் வரை அரசு ஊழியர் முதல் இன்ஜினியர் வரை பல தரப்பைச் சேர்ந்தவர்களும் பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்து கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல.. இதுவரை வெளிவராத தகவல்களை சொல்லும் தளபதி..

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, இப்போதும் சமூக வலைதளங்களில் காரசார வாதங்கள் நடந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் ஃபேமசாக இருப்பவர்கள் வியூஸ், லைக்குக்கு ஆசைப்பட்டு பரபரப்பான போஸ்ட்களை போட்டு போலீசிடம் மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த ஷர்மிஸ்தா பனோலி என்ற இளம்பெண் போலீசிடம் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். யார் இந்த ஷர்மிஸ்தா பனோலி?

புனேயில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக காரசாரமாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார். அந்த வீடியோவில், இஸ்லாம் மதத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாலிவுட் முன்னணி நடிகர்கள் வாய் திறக்காதது ஏன்? எனவும் காரசாரமாக வீடியோவில் பேசியிருந்தார், ஷர்மிஸ்தா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஷர்மிஸ்தா எதிர்பார்த்ததைவிட, பல மாநிலங்களில் இருந்தும் கண்டனக்கணைகள் பறந்து வந்தன.

கொல்கத்தா போலீசில் அவர் மீது புகார் செய்யப்பட்டது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்மனும் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகாத ஷர்மிஸ்தா, புனேயை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். உடனடியாக தான் போட்ட சர்ச்சை வீடியோவை நீக்கினார். தன்னுடைய கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

என் தனிப்பட்ட உணர்வுகளை வெளியிட்டிருந்தேன். யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்குடன் அந்த வீடியோவை வெளியிடவில்லை. யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். என்னை புரிந்து கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். இனிமேல் கவனமாக பதிவிடுவேன் என ஷர்மிஸ்தா கூறியிருந்தார்.

அதற்குள் அவரை கைது செய்ய கொல்கத்தா தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டனர். டில்லி அருகே குருகிராமில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க த்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், இன்று கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 13ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!