ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் 6E 579 விமானம், டெல்லியை நெருங்கியபோது இன்ஜின் பழுதடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போயிங் 737 ரக விமானத்தில் 161 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், டெல்லி விமான நிலையத்தை அடைவதற்கு சற்று முன்பு இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!
இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விமானம் துருக்கியின் கோரியன்டன் விமான நிறுவனத்திடமிருந்து இண்டிகோ நிறுவனம் குறுகிய காலத்துக்கு குத்தகைக்கு எடுத்த 5 விமானங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், விமான நிலைய அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஐபிஎல் சீசன் தொடங்கியுள்ள நிலையில், விமானப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இத்தகைய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது ரசிகர்கள் மற்றும் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெயிலுக்கு விட்டாச்சு லீவு! ரெண்டு நாள் நிம்மதி!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை!!