காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே பரபரப்பான சூழல்.. தமிழகத்தில் 2 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை!!

பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என்று பதிவிடப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பிலும் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட SCALP ஏவுகணை.. இதன் துல்லியத்துக்கு இதுதான் காரணமா?