கடந்த 10 நாட்களாக ஈரான் - இஸ்ரேல் இரு நாடுகளும் மாறி, மாறி தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.

பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது.
இதையும் படிங்க: கமேனிக்கு டார்கெட்..? தனக்கு பிறகு யார்..? 3 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்த ஈரான் தலைவர்..!
இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை.
இதுவரை 25க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது.

இருப்பினும் பெரிய சேதம் இல்லை. காரணம், இஸ்ரேலின் வலிமையான வான் தடுப்பு கவசங்கள் தான். உலக அளவில் பெயர் போன அயன் டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ-2, ஆரோ-3 என நான்கு ஏவுகணை தடுப்பு கவசங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. பேட்ரியாட்ஸ், தாட் மற்றும் ஏவுகணை தடுப்பு போர் கப்பலையும் இஸ்ரேலுக்காக அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது.
இவ்வளவு பெரிய வான் தடுப்பு கவசம் இஸ்ரேலுக்கு இருப்பதால் தான் ஈரான் அளவு பேரிழப்பை சந்திக்கவில்லை. ஆனால் இவ்வளவு பாதுகாப்பான நிலை இன்னும் எத்தனை நாள் தொடரும் என்பது தான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி. காரணம், இஸ்ரேல் வசம் இருப்பு இருக்கும் இடைமறிப்பு ஏவுகணைகள் வேகமாக குறைந்து வருகின்றன.

இந்த சூழலில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 16 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் மத்திய பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சைரன் சத்தமும் ஒலிக்கப்பட்டது. இதேபோல், பென் குரியன் விமான நிலையம் உள்பட பல்வேறு தலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதுதவிர, உயிரியியல் ஆராய்ச்சி மையம், ஆயுத தளவாட தளங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!