இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இதற்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. ஈரானின் இந்த அதிரடி தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்ற நிலை உண்டானது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பு திருப்பமாக, இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நள்ளிரவில் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும். இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் அமைதியை தேடி வந்தன. போரை முடிவுக்கு கொண்டு வரும் இரு நாடுகளின் புத்திசாலித்தனத்துக்கு வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க: வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்.. அடுத்தடுத்து ரத்தாகும் விமானங்கள்.. போர் பதற்றத்தால் ஸ்தம்பிக்கும் உலகம்..!
மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் அழியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என டிரம்ப் அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால், டிரம்ப் அறிவிப்பை ஈரான் உடனடியாக நிராகரித்துது. போர் நிறுத்தம் இல்லை; இஸ்ரேல் மீது தாக்குதல் தொடரும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறினார்.

ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, பதிலுக்கு அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியது, அதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தது, போர் நிறுத்தம் இல்லை என உடனடியாக ஈரான் மறுத்தது என என அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்தது.
இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்தார். இதனிடையே, டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தெற்கு இஸ்ரேலில் உள்ள (Be'er Sheva) பீர் ஷெவா நகரில் இன்று அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது.

ஏவுகணை வீச்சில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் முற்றிலும் நொறுங்கியது. பல கார்கள் எரிந்து போயின. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர்கள் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரானின் ஆக்ரோஷ தாக்குதலால் இஸ்ரேல் நகரங்களில் பதற்றம் அதிகரித்த நிலையில், புதிய திருப்பமாக போர் நிறுத்தம் இன்று காலை அமலுக்கு வந்து விட்டதாக, ஈரான் அரசு டிவி அறிவிப்பு வெளியிட்டது.
டிரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பில், 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் கூறியிரு்ந்தார். அதுபோல 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்ததை உறுதி செய்துள்ளது. எனவே, இஸ்ரேலும் 12 மணி நேரத்துக்குள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் கடைசி ரவுண்ட் ஏவுகணை தாக்குதல் நடத்தியபிறகு போர் நிறுத்தத்தை உறுதி செய்துள்ளது. அதுபோல, இஸ்ரேலும் தாக்குதல் நடத்துமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு எதிரான ஆபரேசன் ‘பெஷரத் ஃபடா’.. ஈரான் டம்மி என கலாய்க்கும் ட்ரம்ப்..!