வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், திரிபுரா, மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால், அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள சிஜின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், டபோரிஜோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின; 100க்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கின்றன. அங்கிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிஜின் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேற்கு கமெங் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் புகுந்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து முடங்கியது. ஜமிரிக்கு அருகே 35 சராய் பகுதியில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று முதல் இலவசம்.. அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு..!

மேற்கு கமெங் மாவட்டத்தின் பனா - செப்பா சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், அவ்வழியாக சென்ற வாகனங்கள் சிக்கின. இதில், கார் ஒன்றில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். அசாமில் லக்கிம்பூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள், வீடுகள் என, காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

குவஹாத்தியில் இடைவிடாமல் கொட்டிய மழையால் பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழையால் இங்கு நிலச்சரிவில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மிசோரமின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. லாண்ட்லாய் நகரில் கொட்டிய கனமழையால், ஒரு உணவகம் மற்றும் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டடக் குவியல்களில் குறைந்தது 20 பேர் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, சிக்கிம் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.

வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டன் எனும் பகுதியில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று மாலை அங்கு பெய்த கனமழை காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 ராணுவ வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து ராணுவம் தரப்பில் கூறியதாவது; இதுவரையில் நிலச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுடன் 4 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாவாலான வானிலையிலும், மாயமான 6 ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!