கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று கொச்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் விபத்துக்குள்ளான இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று புறப்பட்ட இந்தக் கப்பல் அன்று இரவே 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்றும் அதை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது கப்பலில் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் உயிர் காக்கும் உடைகளின் மூலம் தப்பித்த நிலையில், ஹெலிகாப்டர் மூலமும், மாற்று கப்பல் மூலமும் 12 பேர் மீட்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மேலும் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்.. சிக்கியவர்களின் நிலைமை என்ன..?

இந்த நிலையில், சரக்கு கப்பலில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக இன்று கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது. சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், சிலவற்றில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவை கரை ஒதுங்கும் சமயத்தில் அதன் அருகே மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என்றும் கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்த பொருளையும் தொட வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. மேலும் ஏதேனும் அவசரம் என்றால் 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரபிக்கடல் ஆப்ரேசன்.. கடற்படை தளபதிக்கு மோடி கொடுத்த உத்தரவு.. அச்சத்தில் உறையும் பாகிஸ்தான்..!