ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பசந்த்கார் அருகே ஜோபார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த ஆபரேஷன் 'கியா' என்ற பெயரில் நடத்தப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்பிறகு எல்லைப்பகுதியில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது. இந்நிலையில் உதம்பூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
காஷ்மீர் போலீசார், சிஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். காட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!
கிட்டத்தட்ட 20 மணி நேரம் நீடித்த இந்த தீவிர சண்டையில், இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை படையினர் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என உறுதியானது. அவர்களில் ஒருவரான ரூபானி (அலியாஸ் அபு மாவியா) ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதி என தெரியவந்தது.
ரூபானி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்தவர். அவரை என்கவுன்டரில் கொன்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மேலும் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்கிறது.
சமீபத்தில் கதுவா மாவட்டம் பிலாவார் பகுதியில் நடந்த என்கவுன்டரில் உஸ்மான் என்ற ஜெய்ஷ் தளபதி கொல்லப்பட்டார். அவரும் பாகிஸ்தான் வம்சாவளி என தெரியவந்தது. இந்த இரு என்கவுன்டர்களும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு பெரும் அடியாக அமைந்துள்ளன.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகள் காஷ்மீரில் அமைதியை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரின் வீரத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!