மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோக திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கொடூரமானது; ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. மக்கள் மாற்றத்தையும் நல்ல ஆட்சியையும் விரும்புகிறார்கள் எனக்கூறினார்.
வேலையின்மையால் இளைஞர்களிடையே விரக்தி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் சுயநல அரசியலாலும் மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அது ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது. முர்ஷிதாபாத், மால்டாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொடுமைகளுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கும் தெளிவான சான்றுகளாக உள்ளன.
அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடந்த ஊழல் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலத்தை அரசு அழித்துவிட்டது. மாநிலத்தின் கல்வி முறையும் சீரழிந்து வருகிறது. ஆனால் இப்போது கூட திரிணாமுல் காங்கிரஸ் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதற்கு பதிலாக நீதிமன்றங்களை குறை கூறுகின்றனர். மேற்கு வங்க இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆளும் அரசு செய்த ஊழல்களின் சுமைகளை சுமந்து வருகின்றனர். அவர்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
இதையும் படிங்க: இனி சிலிண்டர் தேவையே இல்லை! பிரதமர் மோடி துவங்கி வைத்த அட்டகாசமான திட்டம்.!

வன்முறை, ஊழல் மற்றும் தாஜா அரசியலில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு விடுதலை தேவை. பாரதிய ஜனதா தொண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது எப்படி என்ற சவால் நம் முன் இருக்கிறது. அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்து, அவர்களுடைய வளர்ச்சிக்கு நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, என்னுடன் டிவியில் நேரடி விவாதத்துக்கு வர தயாரா? நீங்கள் உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கூட tele prompter எடுத்து வரலாம் என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் குழுக்களாக பிரிந்து உலக நாடுகளுக்கு சென்று, சர்வதேச அளவில் தேசநலனை பாதுகாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசோ, அரசியல் ஹோலி விளையாடி கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது என மம்தா பானர்ஜி கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் போல ஆபரேஷன் பெங்கால் நடத்துவோம் என்று பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் நாளையே கூட தேர்தலை நடத்துங்கள்; நாங்களும் மேற்கு வங்க மக்களும் தயாராகவே உள்ளோம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்
இதையும் படிங்க: I.N.D.I.A கூட்டணியில் விரிசல்? மு.க ஸ்டாலின் IN.. சித்தராமையா, மம்தா Out.. நிதி ஆயோக் கூட்டத்தால் பரபரக்கும் அரசியல்..!