ரயில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் நீண்ட காலமாக சந்தித்து வந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 15) முதல் இந்த புதிய இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய தளத்தின் மூலம் முன்பதிவு வேகம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ள இந்த புதிய இணையதளம், டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை எளிதாகவும், விரைவாகவும் மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு நிமிடத்திற்கு சுமார் 32 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்த நிலையில், புதிய தொழில்நுட்ப மேம்பாட்டால் இனி ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தட்கல் மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்படும் சர்வர் நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தட்கல் டிக்கெட் புக் செய்ய சூப்பர் நியூஸ்! ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்! சர்வர் பிரச்சினைக்கு முடிவு!

டிக்கெட் முன்பதிவுடன் தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நிமிடத்திற்கு சுமார் 4 லட்சம் விசாரணைகளை மட்டுமே கையாள முடிந்த நிலையில், புதிய இணையதளம் ஒரே நேரத்தில் 40 லட்சம் வரை டிக்கெட் நிலவரத் தேடல்களை எந்தவித தடையும் இல்லாமல் கையாளும் திறன் பெற்றுள்ளது.
புதிய இணையதளத்தில் தேவையற்ற விளம்பரங்கள், பாப்-அப் சாளரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பயணிகள் வெவ்வேறு தேதிகளில் உள்ள டிக்கெட் கட்டணங்களை ஒரே திரையில் ஒப்பிட்டு பார்க்கலாம்.
அதேபோல், அனைத்து வகுப்புகளிலும் இருக்கை இருப்பு விவரங்களை தனித்தனியாகத் தேடாமல் ஒரே பக்கத்தில் அறிய முடியும். விருப்பமான இருக்கை அல்லது படுக்கை வசதியைத் தேர்வு செய்யும் வசதியும் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளை பயன்படுத்தும் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும், பல இந்திய மொழிகளில் இணையதளத்தை பயன்படுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாடுகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பைவிட வேகமாகவும், எளிமையாகவும் அமையும் என இந்திய ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தட்கல் டிக்கெட் புக் செய்ய சூப்பர் நியூஸ்! ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்! சர்வர் பிரச்சினைக்கு முடிவு!