பீகார் மாநில அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநிலத்தின் நீண்டகால முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் என்டிஏ கூட்டணி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜேடியு கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் கடந்த நவம்பர் மாதம் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். பீகார் வரலாற்றில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்த பெருமைக்கு அவர் சொந்தக்காரர். 2005-ஆம் ஆண்டு முதல் இடைவெளிகளுடன் ஆட்சியை தொடர்ந்து வழிநடத்தி வருபவர் இவர்.

சமீபத்தில் 75 வயதை எட்டிய நிதிஷ் குமார், தனது அரசியல் பயணத்தில் பல மாற்றங்களைச் செய்து, மாநில வளர்ச்சிக்கு பங்களித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, முதலமைச்சர் பதவியை துறப்பதாக அவர் அறிவித்துள்ளார். புதிதாக அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஜேடியு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!
அவரது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி தொண்டர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிஷ் குமாரை தொடர்ந்து முதலமைச்சராக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும், ராஜ்யசபா உறுப்பினராக அவர் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பீகாரில் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில தகவல்களின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் என்டிஏ கூட்டணியின் உறுதியான ஆட்சியை பாதிக்காது என்றாலும், நிதிஷ் குமாரின் தலைமையில் பீகார் பெற்ற வளர்ச்சி மற்றும் அவரது அரசியல் திறமைக்கு மாற்று யார் என்பது இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது. மாநில மக்கள் மத்தியில் இது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. பீகார் அரசியலின் எதிர்காலம் இனி எவ்வாறு அமையும் என்பதை உறுதியாக கணிக்க முடியாத நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: ரோஸ் டே சர்ப்ரைஸ்... நாசமா போச்சு..! கணவனுக்கு பரிசு கொடுத்த மனைவி மீது வழக்கு..!