ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில், Dianali என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்ற பழங்குடி நபர் ஒரு அதிர்ச்சிகரமான செயலைச் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா கடந்த ஜனவரி 26, 2026 அன்று உயிரிழந்தார். அவரது பெயரில் ஒடிசா கிராமிய வங்கியின் மாலிபோசி கிளையில் சுமார் ரூ.20,000 இருந்தது.
இந்தப் பணத்தை எடுக்க ஜீது பல முறை வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் “கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தான் பணம் எடுக்க முடியும்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டனர். ஜீது ஒரு ஏழை, படிப்பறிவற்ற மனிதர். சகோதரி இறந்துவிட்டதாக திரும்பத் திரும்பச் சொன்னபோதும், வங்கி அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, “அவரையே அழைத்து வாருங்கள்” என்று கூறியதாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மறுப்புகள் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. சகோதரியின் மரணத்தை நிரூபிக்க வேறு எந்த ஆவணமும் அவருக்குத் தெரியாது. வங்கி நிர்வாகம் உரிய நடைமுறைகளை இறப்புச் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசு உரிமை, அல்லது நாமினி விவரங்கள் அவருக்கு தெளிவாக எடுத்துரைக்கவில்லை என்று போலீசார் பின்னர் விளக்கமளித்தனர். இந்த நிலையில், வேறு வழியின்றி ஜீது ஒரு மிக மோசமான முடிவுக்கு வந்தார்.
இதையும் படிங்க: உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!
சகோதரி இறந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது கல்லறையைத் தோண்டி எலும்புக்கூட்டை எடுத்து, அதைத் தோளில் சுமந்தபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்தார். இந்த நிலையில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இதில் உடனே தலையிட்டு தேவையான ஆவணங்களை வழங்க செய்து, வங்கியிலிருந்த ரூ.19,402 பணம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரது வறுமை நிலையை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் ரூ. 30,000 நிதியுதவியும் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!