காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு நறுக்குனு நாலு கேள்வி.. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய விவாதம்.. சிக்கலில் பாஜக..
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இதெல்லாம் நடந்து ஒரு மாதமான நிலையில், சேதம் அடைந்த விமானப் படை தளங்களை பாகிஸ்தான் ராணுவம் தார்ப்பாய்கள் போட்டு மூடியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேக்ஸார்(Maxar) என்ற நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள சேதமடைந்த விமானப்படை தளங்களின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
மே 10ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரித்கே விமானப்படை தளம் கடும் சேதமடைந்தது. தற்போது, அத்தளத்தின் மீது பச்சை நிற தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது.சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போலாரி விமானப்படை தளமும் இந்தியாவால் தாக்கப்பட்டது.

அப்போது சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்த நிலையில், தற்போது, அத்தளத்தின் மீது தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. மற்றொரு விமானப்படை தளமான ஜகோபாபாதில், இதே நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் 11ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்தன. ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் அந்நாட்டு அரசு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் மூலம் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை, மறைக்க இத்தகைய ஏற்பாடுகளை பாகிஸ்தான் முயற்சிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இப்போது செயற்கைக் கோள் புகைப்படங்களின் வாயிலாக அதன் செயல்பாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலுக்கு பூனை காவலா? பாகிஸ்தானுக்கு பொறுப்பா? ஐநா முடிவால் ராஜ்நாத் சிங் அதிருப்தி..