பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இன்று கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு நடைபெற்றது. நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிலர் முழக்கங்கள் எழுப்பியதாகவும், அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் சபையின் நடுப்பகுதிக்கு வந்து இந்தப் பிரச்சினையை எழுப்பினர். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டது. மக்களவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதால் மாலை 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்யசபாவில் கொதிக்கும் நட்டா! அனல் பறக்கும் வாதம்!

அதேபோல் மாநிலங்களவையிலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் இதே பிரச்சினையை கிளப்பினர். மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசுகையில், “காங்கிரஸ் போராட்டத்தில் பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கங்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகின்றன.
ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் அரசியல் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த சர்ச்சை பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல்: பாமக-வில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!