இந்திய ரயில்வேயில் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய உதவிய UTS (Unreserved Ticketing System) மொபைல் செயலி விரைவில் நிறுத்தப்படவுள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த செயலி முழுமையாக செயலிழக்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

2014 டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட UTS செயலி, ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்காமல் மொபைல் மூலம் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை வாங்க உதவியது. குறிப்பாக தினசரி பயணிகள், உள்ளூர் ரயில்களை பயன்படுத்துபவர்கள் இதை பெரிதும் நம்பியிருந்தனர். இதன் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் உள்ளிட்டவற்றை விரைவாக பெற முடிந்தது.
இதையும் படிங்க: நண்பண் கூப்பிட்டதால போறேன்! மலேசியா புறப்பட்டார் மோடி! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 விஷயங்கள்!!
ஆனால் தற்போது ரயில்வேயின் புதிய ஒருங்கிணைந்த செயலியான ரயில் ஒன் (RailOne) அறிமுகமாகியுள்ளதால், UTS-ஐ நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரிய செயல்பாட்டு இயக்குநர் திலீப் குமார் அளித்த பேட்டியில், "ரயில் ஒன் செயலியில் UTS-இன் அனைத்து அம்சங்களும் உள்ளன. ஒரே சேவைக்கு பல செயலிகள் தேவையில்லை என்பதால் இந்த மாற்றம்" என்று தெரிவித்தார்.
ரயில் ஒன் செயலி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மட்டுமின்றி, IRCTC ரயில் கனெக்ட் செயலியில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. உணவு ஆர்டர் செய்வது, புகார்கள் அளிப்பது, ரிசர்வ்டு டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் பெறலாம். எனவே, பயணிகள் மற்ற செயலிகளை அன்இன்ஸ்டால் செய்து, ரயில் ஒன்-ஐ மட்டும் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS செயலியில் இருந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டே ரயில் ஒன் செயலியில் லாகின் செய்ய முடியும். இதனால் பயணிகளுக்கு மாற்றம் எளிதாக இருக்கும். மேலும், ரயில் ஒன் செயலியை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது டிஜிட்டல் பேமெண்ட் மூலம் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆர்-வாலெட் (R-Wallet) பயன்படுத்தினால் கூடுதலாக 3 சதவீதம் என மொத்தம் 6 சதவீதம் வரை சேமிப்பு செய்யலாம்.

இந்த சலுகை ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த மாற்றம் ரயில்வேயின் டிஜிட்டல் சேவைகளை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு மிகவும் வசதியான, நவீன அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, UTS பயனர்கள் விரைவில் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பழகிக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு கலப்பை விவசாயி... அத்வாலேவுக்கு கரும்பு விவசாயி... சின்னம் ஒதுக்கீட்டில் சர்ப்ரைஸ்..!