வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போதைய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியது வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்தியா மீதான விரோத உணர்வு பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்படுவதாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களே இந்திய தூதரகத்தையும் தாக்குகின்றனர் என்று அவர் கூறினார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் பயங்கரவாதம் பெருகியுள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாதிகளை எதிர்க்காமல் ஆதரிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
வன்முறையைத் தடுக்க யூனுஸ் அரசுக்கு சக்தி இல்லை என்றும், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் சர்வதேச அளவில் வங்கதேசத்தின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்தார். இது அண்டை நாடுகளுடனான உறவுகளையும் பாதிக்கிறது என்று அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை! புர்பச்சல் நில ஊழல் வழக்கு! குடும்பமே சிக்கியது!

முகமது யூனுஸ் பயங்கரவாதிகளை அமைச்சரவையில் அமர்த்தியுள்ளார் என்றும், தண்டனை பெற்ற பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்துள்ளார் என்றும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
முகமது யூனுஸுக்கு சிக்கலான நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லை என்றும், அவர் அரசியல்வாதி அல்ல என்றும் ஷேக் ஹசீனா சுட்டிக்காட்டினார். யூனுஸ் அதிகாரமற்றவர் என்றும், அவரது ஆட்சியில் வங்கதேசம் குழப்பத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இதனால் இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
வங்கதேசத்தில் தற்போது நிலவும் வன்முறை வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகவும் ஷேக் ஹசீனா கூறினார். இந்தப் பேட்டி வங்கதேச அரசியல் மற்றும் இந்தியா-வங்கதேச உறவுகள் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன அவமானப்படுத்திட்டாங்க!! அதிபர் பதவியே வேணாம்?! வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு