சினிமாவில் கதை, வசனம் எழுதி கைதட்டல் வாங்கலாம், ஆனால் மக்கள் ஆட்சியில் கதை வசனம் எழுத முடியுமா என்றும், அறிவித்த நலத்திட்டங்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து தள்ளிப்போடுவது மட்டுமே இந்த தவெக அரசின் ஒரே சாதனையாக உள்ளது என்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், ரத்ததான முகாம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார்.
இதையும் படிங்க: தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
அப்போது ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழிசை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த மக்கள் திட்டங்களை ஒவ்வொன்றாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார். காமராஜர் பெயரிலான மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் தள்ளிப்போய் உள்ளன. திட்டங்களைத் தள்ளிப்போடுவதே இந்த ஆட்சியின் சாதனையாக மாறியுள்ளது
.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து வருவேன் என்று கூறிவிட்டு, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார் எனப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உள்நாட்டு நிறுவனத்துடன் ரூ.13,500 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். சினிமாவில் கதை, வசனம் எழுதி நடிக்கலாம், விளையாட்டுகளை ஆடலாம்; ஆனால் மக்கள் ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இப்படி விளையாட முடியுமா? இந்த ஆட்சி மக்களிடம் வெறும் விளையாட்டாக போய்க்கொண்டிருக்கிறது என்று விளாசினார்.
தொடர்ந்து தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்த அவர், இன்று காலை எனது வீட்டில் மதுரைக் கோவில் மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக நேரலை காட்சிகளைப் பக்திப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. உடனே 'மீனாட்சி, இந்த ஆட்சியில் கரண்ட் கட் ஆகிவிட்டது, உன்னை முழுமையாகத் தரிசிக்க வேண்டும்' என வேண்டினேன்; அதன்பிறகே மின்சாரம் வந்தது.
காலை 5.00 மணி முதல் 5.30 மணி வரையிலும், பின்னர் 7.00 மணி முதல் 7.25 மணி வரையிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எங்குமே மின்தடை இல்லை என்று அரசு பொய் சொல்லக் கூடாது; அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது. இதற்காக மின்துறை அமைச்சருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் கூட்டணிக் களம் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய தமிழிசை, இடைத்தேர்தல் குறித்துப் பாமக விரைவில் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று கூறியிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) தொடர்வார்கள். பதவி சுகத்திற்காக மட்டுமே மரகதம் குமரவேல் போன்றவர்கள் தவெக-வில் இணைந்து மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர்.
அதேபோல், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அவர் முன்னிலையிலேயே அவரது கட்சியினர் அடித்துக் கொள்கிறார்கள். 'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்பதை விசிகவினர் மற்றவர்கள் மீது அல்ல, தங்களுக்கே தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள் எப்போதும் இறைநெறி காட்டும் பெரியாழ்வாருடன் தான் நிற்போம்; நாத்திகப் பெரியாருடன் ஒருபோதும் நிற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!