ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் விபத்து காப்பீடு வசதி, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைப்பது சமத்துவத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுன்ட்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கும் இதே காப்பீடு வசதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராதா யாதவ் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு வழங்கப்படுவதாகவும், ஆனால் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு இந்த வசதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது சமநிலையின்மையை ஏற்படுத்துவதாகவும், உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
நீதிபதிகள் அசானுதின் அமானுல்லா மற்றும் மகாதேவன் அமர்வு முன்பு நேற்று (மார்ச் 12, 2026) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே தரப்பு எந்த சாதகமான முடிவையும் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் முறைகேடு!! களம் இறங்கிய நீதிபதிகள்! தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பயணி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்குகிறாரா அல்லது கவுன்ட்டரில் வாங்குகிறாரா என்பதில் பாகுபாடு காட்ட முடியாது. விபத்து காப்பீடு என்பது சிலருக்கு மட்டும் இருக்கக் கூடாது. கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் அனைத்து பயணிகளுக்கும் இந்த வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெளிவாக உத்தரவிட்டனர்.
ரயில்வே தரப்பு, கவுன்ட்டரில் காப்பீட்டுக் கட்டணம் வசூலிப்பது மற்றும் விவரங்கள் பதிவு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல் உள்ளதாக வாதிட்டது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். "நவீன காலத்தில் இது பெரிய தடையாக இருக்க முடியாது. பயணி ரயில்வேயை நம்பி பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு விபத்து காப்பீடு முதல் பாதுகாப்பான பயணம் வரை அனைத்துக்கும் ரயில்வே நிர்வாகமே பொறுப்பு" என்று கடுமையாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவு லட்சக்கணக்கான கிராமப்புற பயணிகள், முதியோர், இணைய வசதி இல்லாதவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை இனி கவுன்ட்டர் டிக்கெட்டுகளிலும் காப்பீடு வசதியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தீர்ப்பு ரயில்வேயின் பயணிகள் நலத் திட்டங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!