தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பொதுப்பணித்துறை செயலாளராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாகச் செயல்பாடுகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஆர். செல்வராஜ், தற்போது பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு ஐஏஎஸ், தற்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சிறப்புச் செயலாளராக இருந்த சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்க உள்ளார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக இருந்த பி. உமா மகேஸ்வரி ஐஏஎஸ் கைத்தறித் துறை இயக்குநராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராகப் பிரதீப்குமார் ஐஏஎஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?
மேலும், அழகு மீனா ஐஏஎஸ் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராகவும், ஆர். சுரேஷ்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) சித்ரா விஜயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் இந்த முக்கியத் துறைசார்ந்த அதிகாரிகள் மாற்றங்கள், புதிய திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!