ஐக்கிய நாடுகள் சபை: வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்கள் வங்கதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிப்பதோடு, சிறுபான்மையினரின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 2026-இல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதையும் படிங்க: வங்கதேச வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!! மதவெறுப்பை பரப்பினாரா? வங்கதேச போலீஸ் விசாரணை!
இந்தப் போராட்டங்களின்போது ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மேலும், என்.சி.பி. கட்சியின் தொழிலாளர் அமைப்பான 'ஜதியா ஸ்ராமிக் சக்தி'யின் குல்னா பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது மொதாலெப் சிக்தார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நிருபர்களிடம் பேசுகையில், “வங்கதேசத்தில் நாங்கள் கண்ட வன்முறை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம். வங்கதேசமாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையினரல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்.
தற்போது வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசினா அரசு வீழ்ந்த பிறகு அரசியல் ஸ்திரமின்மை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீபு சந்திர தாஸ் கொலை சம்பவம் உள்ளிட்ட வன்முறைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் இந்த வன்முறைகளை கண்டித்துள்ளன. வங்கதேச இடைக்கால அரசு இந்தச் சம்பவங்களை கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!