பிரதமர் நரேந்திர மோடி, உலக அமைதிக்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "உலகளாவிய எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. மோதல்களை பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்க வேண்டுமே தவிர ராணுவ நடவடிக்கையால் தீர்க்கக் கூடாது" என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசினார். இதன்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருவரும் கூட்டு நிருபர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தற்போது உலகில் நடைபெற்று வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்காவின் தலையீடு, உக்ரைன்-ரஷியா போர் ஆகியவற்றை குறிப்பிட்டு கவலை தெரிவித்தார். "ஈரான் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் போர் தீர்வு அல்ல. பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! உயர்ந்தது பலி எண்ணிக்கை!!
உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது அவசியம். அதை விரைவில் செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் பேசும்போது, "இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்று. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நான் மிகவும் மதிப்பது என்னவென்றால், அது யதார்த்தமான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தியாவின் அமைதி மற்றும் உரையாடல் அணுகுமுறையை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சந்திப்பு உலக அரங்கில் இந்தியாவின் அமைதி முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!