தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று சென்னை சட்டசபை வளாகத்தில் பரபரப்பாக நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். சட்டசபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். “தமிழக மக்களுக்காக தன்னை இயந்திரமாக மாற்றிக்கொண்டு உழைக்கும் முதல்வரை வணங்குகிறேன்” என்று அவர் பேசியது அவையில் கவனம் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்றார்.
பின்னர் எம்எல்ஏ பதவி ஏற்றதற்கான பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் பிரபு ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.
இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!

அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவியேற்றனர். முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், சட்டசபை கூட்டத்தில் 7 உறுப்பினர்கள் பதவியேற்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.
சேந்தமங்கலம் சந்திரசேகரன், காமாட்சி, சரவணன், சி.வி.சண்முகம், கே.சி.கருப்பண்ணன், உஷாராணி உள்ளிட்டோர் இன்று பதவியேற்கவில்லை. இதேபோல் அமைச்சரான கீர்த்தனாவும் வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் பதவியேற்க முடியாமல் போனது கவனத்தை ஈர்த்தது.
சட்டசபையின் முதல் நாளிலேயே பல உறுப்பினர்கள் பதவியேற்காத சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அதிமுக தரப்பில் உள்ள உள்கட்சி குழப்பங்கள் மீண்டும் வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!