தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. ராயப்பேட்டையில் உள்ள ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ இன்று முதல் வேட்பாளர் நேர்காணலால் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இன்று காலை முதல் தொடங்கி நடைபெறவுள்ள இந்த நேர்காணலில், மண்டலம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணலில் பங்கேற்க வரும் வேட்பாளர்கள், தாங்கள் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ரசீது இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் அவர்களின் செல்வாக்கு, கட்சிப் பணி மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: “ராயப்பேட்டையில் குவியும் அதிமுக நிர்வாகிகள்!” ஜனவரி 9 முதல் நேர்காணல்; வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் காட்டும் வேகம்!
முன்னதாக, பாஜக-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களைத் தயார் செய்யும் பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இன்று முதல் தொடங்கும் இந்த நேர்காணல் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேர்காணலை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2026-தேர்தல் வியூகம்: டிசம்பர் 31-ல் எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்! மாசெக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு?