பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக தொடர்ந்து பாமகவில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ். மருத்துவர் ராமதாஸ் கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை நியமனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். புதிய பொறுப்பாளர்கள் தைலாபுரம் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 27 மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்று கூட 8 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 7 மாவட்ட தலைவர்கள் என 35 மாவட்ட செயலாளர்கள், 13 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என அனைவரையும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் மாற்றம் தொடரும் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீக்கிய அனைவருக்கும் உடனடியாக பதவி வழங்கப்படும் என அன்புமணி ஒருபுறம் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாமகவில் அப்பா - மகன் இடையிலான பிரச்சனை தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக அன்புமணி அவர்களுடைய சகோதரிகள் அவருடைய தாய் உள்ளிட்ட பலபேர் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு வேண்டாம், தொடர்ந்து நீங்கள் ஒற்றுமை மையாக செயல்பட்டால் தான் கட்சி வளரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

மேலும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது இது போன்ற நேரத்தில் கட்சியில் விரிசல் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல என தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகளை செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கட்சியினுடைய முன்னாள் எம்எல்ஏக்கள், அன்புமணி உடைய ஆதரவாளர்கள், ராமதாஸுக்கு நெருக்கமான பாமக முக்கிய நிர்வாகிகளும் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கூட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதில் உடன்பாடு எட்டிய நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சென்னை ஈசிஆர் அக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சென்று தைலாபுரத்தில் பாமக நிறுவனரும் தன்னுடைய தந்தையுமான ராமதாஸை அன்புமணி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேசப்படும் என்றும், குறிப்பாக ராமதாஸ் வைத்த கோரிக்கைகளை அன்புமணி ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?