இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி, அவரது மனைவி செளமியா அன்புமணி குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்றும், அவரை 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கி தான் தவறு செய்துவிட்டேன் என்றும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைக்க செளமியா அன்புமணி ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதை தான் எதிர்த்ததும் அன்புமணியும், அவரது மனைவியும் மணிக்கணக்கில் என் காலில் விழுந்து அழுததால் தான் கூட்டணிக்கு சம்மதித்தேன் என்றும் தெரிவித்திருந்தார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாமக 3 இடங்களில் வென்றிருக்கும் என்றும், அதனை கெடுத்ததே அன்புமணி தான் என்பது போலவும் குற்றச்சாட்டியிருந்தார்.

பெத்த அம்மாவையே பாட்டிலால் அடிக்க முயன்றார், முகுந்தனுக்கு பதவி கொடுத்ததற்காக பாமக மேடையில் நாகரீகம் இல்லாமல் சண்டையிட்டார், ஜி.கே.மணி மகன் ஜி.கே.எம். தமிழ் குமரனுக்கு போன் செய்து பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டினார் என்றெல்லாம் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதுமட்டுமின்றி பொதுக்குழுவைக்கூட்டி அன்புமணியை பதவியை விட்டு தூக்கிவிடுவேன் என்றும், தான் கொடுத்த செயல் தலைவர் பதவியில் நீடிப்பதாக ஒப்புக்கொண்டால் சமாதானம் என்றும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அன்புமணி கூசாமல் பொய் சொல்வார்... ராமதாஸ் கருத்தால் பாமக-வில் பரபரப்பு!!
ராமதாஸ் சரமாரியாக குற்றம் சாட்டிய நிலையில் நாளை நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். பாமக்கவின் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு பாமக நிர்வாகிகளை அன்புமணி சந்திக்கவுள்ளார். மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க இருக்கிறார்.

நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். குறிப்பாக நாளைய தினம் நடைபெற உள்ள அந்த ஆலோசனை கூட்டத்தில் பாமகவில் தற்போது நடைபெற்று வரும் உட்கட்சி மோதல் குறித்தும், பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: அம்மா மேல பாட்டிலை தூக்கி வீசிட்டான் - அன்னைக்கே நான் செத்துட்டேன் - அன்புமணியால் கலங்கிப்போன ராமதாஸ்..!