அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு விவரங்களை ஜூன் 2ம் தேதி அறிவிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
ஞானசேகரன் குற்றவாளி:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி அறிவித்துள்ளார். தண்டனை குறித்த முழு விவரங்களை ஜூன் 2ம் தேதி அறிவிப்பதற்காகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை? - தீர்ப்பு குறித்து வெளியானது பரபரப்பு உத்தரவு!
கண்ணீர் விட்டு கதறி அழுத ஞானசேகரன்:
நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியதும் அச்சத்தின் உச்சத்திற்கு சென்ற ஞானசேகரன் தனது குடும்ப சூழ்நிலையைச் சொல்லி மன்றாட ஆரம்பித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பை வாசித்ததுமே ஞானசேகரன் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழு ஆரம்பித்துள்ளார்.
உங்களுடைய தரப்பில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்டதும், தனக்கு 8ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது தந்தை இறந்துவிட்டதால் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் என்னையே சார்ந்துள்ளது. எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றாடினார்.

மேலும் தனக்கு நிறைய கடன் இருப்பதால் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை இருப்பதாகவும், முடக்கப்பட்டுள்ள தனது வங்கிக்கணக்கை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அடுத்தடுத்து நீதிபதியிடம் ஞானசேகரன் மன்றாடியுள்ளார்.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான தண்டனை விவரங்களை ஜூன் 2ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகள் உள்ளனவா? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளதால், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கு கடந்து வந்த பாதை:
2024 டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டிசம்பர் 25ம் தேதி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். அதை தொடர்ந்து டிசம்பர் 28ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2025 ஜனவரி 5ஆம் தேதி கைதான ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததை எடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

இதை தொடர்ந்து மார்ச் 7ம் தேதி வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி வழக்கிலிருந்து ஞானசேகரனை விடுவிக்க மறுத்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 21 முதல் 23 ஆம் தேதி வரை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மே 23 ஆம் தேதி வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!