சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையானது. இந்த நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா என்ன கேள்வி எழுப்பிய அவர் அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்றும் சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? எனக் கேட்டுள்ளார்.

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு செய்யும் சேவர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன் என்று சரமாரியாக சாடியுள்ளார். பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை., இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா? திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என கூறினார்.
இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!

ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற கொடுமைகள் தொடராத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விளையாட்டு திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை... போராட்டம் வெடிக்கும்! சீமான் எச்சரிக்கை!