நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்குற்றச்சாட்டை வைத்திருந்தார், அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளது அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்." என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.320 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மேம்பாலத்தில் விரிசல். தரமற்ற முறையில் கட்டப்பட்ட மேம்பாலம்..!! ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு திறந்த மூன்றே மாதத்தில் மழையில் அடித்துச் செல்லப்பட்டது, திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் மேம்பாலம்.

அதேபோல் ஏற்கனவே கட்டி முடித்து திறக்கப்பட்ட மூன்றே மாதத்தில் மழையில் அடித்துச் செல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்பெண்ணை ஆறு மேம்பாலம். அந்த வரிசையில் அடுத்தது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மேம்பாலம். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார், அவர் பாலம் கட்டுவதற்கு என ராமர் பாலத்தை பரிகாசம் செய்தார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவரது மகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கட்டுகிற பாலங்கள் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அல்லது திறப்பு விழா அன்றே விரிசல் விழுகிறது. எல்லாம் ஊழலால் நிகழும் அவலம் மட்டுமல்ல..!! கர்மா என்பது நிதர்சனம்தான்..!!" என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றம் சுமத்திய ராமதாஸ்! கட்சியில் காய் நகர்த்தும் அன்புமணி!
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!