தமிழகத்தில் வரும் ஜூன் 24 ஆம் தேதியுடன் 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்காக வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் கிடைக்கும் சூழல் உள்ளது. இதில், திமுக சார்பில் 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் தற்போது வரை மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வித்யா, முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது.
இதையும் படிங்க: கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் ஆக்குகிறேனு அழைத்தவரே அவர் தான்.. சீமான் பகீர் தகவல்!!

அதனை மனதில் கொண்டு தான் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை சீட் கொடுக்க தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. சுதீஷுடம் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி விட்டு பிறகு சொல்கிறேன் என்று தான் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிமுகவிடம் மாநிலங்களை சீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதில் பாமகவும், தேமுதிகவும் தீவிரம் காட்டி வருகிறது. தேமுதிகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டதால் அவர்களுக்கு சீட் கொடுக்க இபிஎஸ் தயாராக இல்லை எனக்கூறப்படுகிறது. அதேபோல் கடந்த முறை தேர்தலின் போது பாஜக, பாமக இரண்டும் அதிமுகவின் காலை வாரி விட்டதால் அவர்களுக்கும் சீட் தர விரும்பவில்லையாம். இரண்டு சீட்டையும் அதிமுகவினருக்கு கொடுத்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரேமலதா விஜயகாந்தோ, திமுகவில் பாருங்கள் சொன்னது போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் கொடுத்துவிட்டார்கள் . அதுதான் கூட்டணி தர்மம். கொடுத்த வாக்கை காப்பாற்றினால் தான் அரசியலில் கூட்டணி நிலைக்கும் என்றெல்லாம் பேசி எப்படியாவது எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மாநிலங்களவை சீட்டை வாங்கிவிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!