சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய திமுக சார்பில் அமைக்கப்பட்ட 19 கள ஆய்வு குழுக்களில், 13 குழுக்கள் தங்களது விரிவான அறிக்கைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி, மீதமுள்ள ஆறு குழுக்கள் அறிக்கையை தயாரித்து வருவதால் கூடுதல் அவகாசம் கோரியுள்ளன. குறிப்பாக சென்னை மாநகரில் மட்டும் சுமார் 10,000 பேரிடம் நேரடியாக கருத்துக் கேட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அறிக்கையில், எதிர்கால தேர்தல்களில் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும் என்றும், உட்கட்சி பிரச்சினைகள் நீண்ட காலம் தொடர அனுமதிக்காமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மதநம்பிக்கையில் விளையாட்டா.? மேனாமினுக்கு வேலை வேணாம்... H.ராஜா காட்டம்..!!

மேலும், சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் அரசு ஒப்பந்தப் பணிகளில் நேரடியாகவோ அல்லது பினாமி பெயர்களிலோ ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கண்காணிப்பு தேவை என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு முறைக்கு மேல் பதவியில் உள்ள ஒன்றிய செயலர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளை உருவாக்க வேண்டும் என்றும், அடிமட்ட நிர்வாகத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல்களை முன்னிட்டு கட்சி அமைப்பை சுறுசுறுப்பாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகள் குறித்து கட்சி தலைமை விரைவில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
இதையும் படிங்க: சேகர்பாபு ரூ.10 லட்சம் குடுப்பாரு... போட்டிக்கு ரெடியா விஜய்..? சவால் விட்ட ஐ.லியோனி..!!