பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கிறார் சூனா பானா எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"
எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட எத்தனையோ ஸ்கோப் இருக்க பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கிறார் சூனா பானா எடப்பாடி பழனிச்சாமி. நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனை தமிழ்நாடு அரசு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார் என எதிர்க்கட்சிகளுடன் போட்டோ போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட்டை வைத்து விஜய்யும் பழனிச்சாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜாவுக்குதான் தமிழ்நாட்டில் எத்தனை கிளைக் கழகங்கள்?

எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை பார்க்கும்போது "ஏ அங்குட்டு போய் விளையாடுங்கப்பா" என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிச்சாமியின் காமெடி கதறல்கள் காதுகளை குளிர வைக்கின்றன. நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தெருமுனை எனப் பழனிச்சாமி புலம்பியதை எல்லாம் கணக்கிட கால்குலேட்டரே திணறும். நிரந்தர பொதுச் செயலாளர் என எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகட்டிக் கொண்டு போனவர் யார்? எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் இருக்கையை அபகரித்த அபகரிப்பாளர் அல்லவா பழனிச்சாமி.
மார்ச் 25ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காமல் டெல்லிக்கு அவசரமாக செல்லும் அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன வேலை இருந்தது? டெல்லியில் எதற்காக டீல் போட்டார் இபிஎஸ்? "யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும்" என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொன்னார்.பழனிச்சாமி செய்தாரா, இல்லையே.

" பிரத்தியேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என பொய் மூலம் பூசியவர் தானே பழனிச்சாமி. டெல்லியில் உள்ள அண்ணா திமுக அலுவலகத்திற்கு ஒழுங்காக வெள்ளை அடித்திருக்கிறார்களா என பார்க்க போனவர் ஏன் மூன்று கார்களில் மாறி மாறி போனார்? சாமி திரைப்படத்திற்கும் பழனிச்சாமி கேரக்டருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் இந்த சமூகம் நம்ப வேண்டும். சாமி படத்தின் வில்லன் பெருமாள் பிச்சை கதாநாயகனிடமிருந்து தப்பிக்க கிளைமாக்ஸில் மாறி மாறி காரில் போவார். அந்த பெருமாள் பிச்சையை மிஞ்சி விட்டார் பழனிச்சாமி.
இதையும் படிங்க: புதிய எம்.ஜி.ஆர். பவன் கல்யாண்.. நயினார் நாகேந்திரன் குதூகலமாக அறிவிப்பு.!!
அன்றைக்கு டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிச்சாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே 2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா ட்வீட் போட்டாரே. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை எடப்பாடியார் மறந்துவிட்டாரா? அமித்ஷா சந்திப்பு பற்றி அடுத்த நாள் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது," தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை என சூனா பானவாக முழங்கி விட்டு 11.4.25 அன்று அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. அப்போது அமித்ஷா பக்கத்தில் அமர்ந்திருந்த சூராதி சூரர் யார்? இதுதான் பழனிச்சாமி சொன்ன ஓராண்டு காலமா? பச்சை பொய் பழனிச்சாமி என்பதை மணிக்கு ஒரு தடவை நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

முதலில் அதிமுக அலுவலகம் பார்க்க போனேன், பிறகு மக்கள் பிரச்சினைகளுக்காக அமைச்சரை சந்தித்தேன் என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்பட்ட தீபாவளியாக மாறியது. இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க பொய்குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம். முதல் அமைச்சர் தமிழ்நாட்டின் நிதி பகிர்வு மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு பற்றி நேரடியாக வலியுறுத்தி இந்திய மக்கள் முன் எடுத்து வைக்க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், அதை திரித்து தனது அவதூறு அரசியல் குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாடு மீதும் முதலமைச்சர் மீதும் களங்கம் கற்பித்து விடலாம் என பழனிச்சாமி போட்ட கணக்கெல்லாம் தப்பு கணக்கானதால் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல சமாளிக்க நீங்கள் போடும் வேடங்கள் உங்களை இன்னும் தோலுரிக்கின்றன.

" பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்" என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதிவிட்டு செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிச்சாமியைக் கண்டு மக்கள் சிரிக்கின்றனர். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிகொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் பழனிச்சாமிக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. தனது ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகதான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புரளிகளை அள்ளிவிட்டு குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் அமலாக்க துறையின் அராஜகத்திற்கு குட்டு வைத்து இடைக்கால தடை விதித்ததும், தனது டெல்லி ஓனர்களோடு சேர்ந்து தான் ஒட்டிய பித்தலாட்டப் புரளி படம் பிலாப்பான விரக்தியில் இப்போது வாய்க்கு வந்ததை உளறுகிறார். தனது ஆட்சி காலத்தில் பதியப்பட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகதான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்கிற வெட்கமே இல்லாமல், திமுகவை குற்றம் சாட்ட நா கூசவில்லையா?
தனது உறவினர்களுடைய வீட்டில் நடந்த ரெய்டுகளுக்கு பயந்துதான் பாஜகவின் பண்ணை அடிமையாக பழனிச்சாமி மாறினார். அதற்காகத்தான் அதிமுகவை பாஜக கூட்டணியில் அடமானம் வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் அறியாத பிள்ளைகளுக்குக் கூட இந்த உண்மை தெரியும். 23ஆம் புலிகேசியாக வாழும் பழனிச்சாமி ரெய்டை பார்த்து எனக்கு பயமா என வீர வசனம் பேசுவதுதான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. தனது உறவினரின் ஊழலுக்கு சப்பை கட்டு கட்டி இருக்கிறார் பழனிச்சாமி. ரூ. 650 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் எனும் ஊழல் குற்றச்சாட்டை டிஸ்கிரிபன்ஸிஸ் என்கிறார் பழனிச்சாமி. டிஸ்கிரிபன்ஸிஸ் என மாற்றுவதற்குதான் டெல்லியில் பதுங்கி பதுங்கி அமித்ஷாவைச் சந்திக்க சென்றாரா?

பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்பது போல அதிமுகவை அடகு வைத்ததற்கான டெல்லி டீலிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் பழனிச்சாமி. நான்தான் சொன்னேனே மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல. உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று பழனிச்சாமி சொல்லி இருக்கிறார். அதாவது மோடி அரசுக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். மேற்குவங்கத்தின் சுவேந்து அதிகாரி, அசாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா, மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயணன் ரானே, சிவசேனாவை சேர்ந்த பாவனா கபாலி, சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சரணாயக் போன்றவர்கள் மீதான அமலாக்கத் துறை வழக்குகளை எல்லாம் பாஜக வாஷிங் மெஷின் எப்படி சுத்தப்படுத்தியது? அந்த வாஷிங்மெஷினில் விழுந்தவர்தானே பழனிச்சாமி அண்ட் கோ. அதன் மூலம் தன் உறவினர்கள் மீதான வழக்குகளை ஒன்றும் இல்லாமல் செய்ய அதிமுக என்கிற ஆலமரத்தையே கோடாரியாக பயன்படுத்தினார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம் என்று நிர்வாகிகள் அலறி துடித்த போதும் கூட அவர்களது கருத்துகளை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே. எடப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும் மேக்கப் குறையாமல்," ஒய்யால என்ன மாதிரி கூவுறான்" என்பது போல பழனிச்சாமியின் கண்ணீர் நன்றாக புரிகிறது. தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்க கட்சியை பலிபீடத்திற்கு கொண்டு வந்த புண்ணியவான்தான் அதிமுக பழனிச்சாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின். உங்களை போல கட்சி அலுவலகத்தை பார்க்க போகிறேன் என சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்கு போனவர் அல்ல எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின்." என்று அறிக்கையில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்.. எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. குஷியில் மநீமவினர்.!