சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் தொடர்பான ஆவணங்களை டெல்லி பாஜக தலைவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட சிலர் கட்சிக்குள் இருந்தபடியே பழனிசாமிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பழனிசாமியும் அவருக்கு நெருக்கமானவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி சேகரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்தில் சசிகலா சேகரித்த சில முக்கிய கோப்புகளும் பழனிசாமியிடம் உள்ளன.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!
இவற்றில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து விவகாரங்கள், பினாமி பெயர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் பழனிசாமியிடம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது தவெக அரசு மீது டெல்லி பாஜக மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகக் கருதப்படுகிறது. ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் விஜய் ஆட்சி நடத்துவதை டெல்லி விரும்பாது என்பதால், சரியான சமயத்தில் தவெக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனக்கு எதிராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்படுத்த பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
மேலும் சில சமூக ஆர்வலர்கள் மூலம் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளை தொடரவும் அவர் தயாரிப்பு செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், “சொந்தக் கட்சியினர் மீதே இப்படி நடவடிக்கை எடுப்பது அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்” என பழனிசாமிக்கு நெருக்கமான சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் அதிமுகவுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!