கர்நாடகா சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மது விற்பனையாளர் சங்கத்தினர் அமைச்சர் திம்மாப்பூர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், அதிகாரிகள் பணிமாற்றம் போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் உள்ளன. இந்த ஊழல் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா குற்றம் சாட்டினார். இதனால் காங்கிரஸ் அரசு 'ஏடிஎம் சர்க்கார்' என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது.
இந்த புகார் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா நடத்தினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாதிரியே!! உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறிய கவர்னர்! கர்நாடகாவிலும் பரபரப்பு!
இந்நிலையில் அமைச்சர் திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜக எம்எல்ஏக்களும், ஜனதா தள (எஸ்) எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜனைகள் பாடினர், முழக்கங்கள் எழுப்பினர். அதிகாலையில் அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பாஜக தலைவர்கள் கூறுவது: இந்த ஊழல் புகார் மது வியாபாரிகள் சங்கத்தால் நேரடியாக எழுப்பப்பட்டது. இது கர்நாடகா வரலாற்றில் முதல் முறை. லஞ்சம் மூலம் சேகரிக்கப்படும் பணம் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர் ராஜினாமா செய்யாவிட்டால் முதல்வர் சித்தராமையா மீதும் குற்றம் சுமத்துவோம் என்று எச்சரித்தனர்.
அமைச்சர் திம்மாப்பூர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தான் ஊழல் செய்யவில்லை என்றும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தார். முந்தைய அரசுகளிலும் இதுபோன்ற புகார்கள் இருந்ததாகவும், தான் சீர்திருத்தங்கள் செய்துள்ளதாகவும் அவர் பதிலளித்தார்.
இந்த போராட்டம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. லோகயுக்தா அதிகாரிகள் சில அதிகாரிகளை கைது செய்த பின்னர் இந்த புகார் வலுப்பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன. இது காங்கிரஸ் அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!