இந்திய வரைபடத்தில் அந்த தவறு... உடனே எதிர்த்த லவ்லினா! பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது, இந்தியாவின் வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை கண்டித்து உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நாட்டின் வரைபடம் தொடர்பான விஷயத்தில் அவர் காட்டிய விழிப்புணர்வு கவனம் பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த உணவகம் ஒன்றில் நாட்டின் வரைபடம் இடம்பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இடம்பெறாமல் இருந்ததை லவ்லினா கவனித்துள்ளார்.
இதையடுத்து, வரைபடத்தில் உள்ள தவறை உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற லவ்லினா, அதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாட்டின் வரைபடத்தை சரியாகக் குறிப்பிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!
லவ்லினாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, உணவக நிர்வாகம் தங்களது தவறை ஏற்றுக்கொண்டு வரைபடத்தை திருத்துவதாக தெரிவித்ததுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டினார். அப்போது லவ்லினாவிடம், உணவகத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நகைச்சுவையாக விசாரித்தார்.
இதற்கு லவ்லினா, வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தபோது தவறாக இருந்த இந்திய வரைபடத்தை பார்த்ததாகவும், உடனடியாக தனது ஆட்சேபனையை தெரிவித்ததாகவும் கூறினார். அதன் பின்னர் உணவக நிர்வாகம் வரைபடத்தில் மாற்றம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
லவ்லினாவின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி பாராட்டினார். இந்திய வரைபடத்தில் இருந்த தவறை திருத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சாதாரணமான ஒன்றல்ல என்றும், அது நீண்ட காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
2026 காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா, போட்டியில் பதக்கம் வென்றதுடன், இந்திய வரைபடம் தொடர்பான தனது விழிப்புணர்வாலும் தற்போது கவனம் பெற்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பிரதமரின் பாராட்டு சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!