பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியைவிட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு காலத்தில் நாட்டின் தனிநபர் வருமான உயர்வு அதிகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவருமான முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம், "நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிட்டோம். இது எனது தரவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தரவு. இந்தியா இப்போது ஜப்பானைவிட பெரியது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இப்போது நமக்கு முன்னாள் உள்ளன. இன்னும் 2 - 3 ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது பெரிய விஷயம் இல்லை." என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது சார்ந்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொதுவாகப் பார்க்கும்போது அவர் சொன்னது சரிதான், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர் முழு தகவல்களையும் கொடுத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது.. போட்டுத் தாக்கிய செல்வப்பெருந்தகை..!

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2003-ல் USD 543 ஆகவும், 2013ல் USD 1438 ஆகவும் இருந்தது. 2023-ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் USD 2711 ஆகவும், 2024-ல் USD 2878 ஆகவும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் இது 2.64 மடங்கு.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகவில்லை. உண்மையில் அது 1.89 மடங்கு. அதேநேரத்தில், 11 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியது. இரண்டு அரசாங்கங்களின் சாதனையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால சாதனையில் சற்று கூடுதல் மகிழ்ச்சியை அடைகிறேன்" என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
.
இதையும் படிங்க: மோடி அரசின் ஏவலாளி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி.. துள்ளிக் குதிக்கும் செல்வபெருந்தகை!