ஈரோடு சோளங்காபாளையத்தில் உடல்நலக்குறைவால் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்கா சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை வைரஸ் யூரோமோனஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அமித்ஷா மதுரைக்கு 7ம் தேதி இரவு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார் என்று தெரிவித்தார். அப்போது அவரிடம், அன்றைய தினம் விஜய், பாஜக கூட்டணியில் இணைவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

அதற்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி அதனை அகற்ற அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். விஜய்க்கு அந்த எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். இதற்குமுன்பு கூட ஒருமுறை சொல்லியிருந்தேன். அதற்கு பதில் இனிதான் வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.மதுரையில் விஜய் இணைவது எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு இப்போது நிர்வாகிகள் கூட்டத்தை மட்டும் கூட்டுகின்றனர்.

கமல் சர்ச்சை பேச்சு குறித்து கேள்விக்கு இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்கள் உள்ளனர். அவரவருக்கு அவர்கள் பேசும் மொழி பெரிது. அவரவர் தாய்மொழியை உயர்த்தி பேசுவது தவறில்லை. கமல் தாய்மொழியை உயர்த்தி பேசியது வரவேற்கதக்கது. மற்ற மொழியுடன் ஒப்பிட்டு பேசுவது பொருந்தாது என்றார்.
இதையும் படிங்க: ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!