புதுடெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, மது, போதைப்பொருள், இலவசப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம், மது, மளிகை, எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக சாமான்கள் போன்றவை மறைமுகமாக வழங்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பணப்பட்டுவாடா பெருமளவில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!
இறுதியாக அதே ஆண்டு நவம்பரில் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேர்தல் கமிஷன் உளவுத்துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை (ED), சுங்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகளுக்கு சிறப்பு அலர்ட் அனுப்பியுள்ளது.

தேர்தல் கமிஷன் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: “கருப்பு பணம், போதைப்பொருள், சட்டவிரோத சலுகைகள் அதிக அளவில் புழங்குகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் சிக்கினால் உடனடியாக வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம், சலுகைகள் வழங்கப்படுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள்.”
கடந்த லோக்சபா தேர்தலில் தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கையால் நாடு முழுவதும் ரூ.69.59 கோடி ரொக்கம், ரூ.8.17 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள், ரூ.330 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.99.85 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.35.21 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் என மொத்தம் ரூ.849.15 கோடி ரொக்கமும் ரூ.8,889.74 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று இம்முறையும் தீவிர கண்காணிப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வருமானவரித் துறை சோதனை குழுக்கள் ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட்டால் தான் நியாயமான தேர்தல் சாத்தியம் என்பதால், இந்த கடும் நடவடிக்கைகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!