சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில் பெரியகருப்பன் 83,364 ஓட்டுகளும், சீனிவாச சேதுபதி 83,365 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியகருப்பன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் ஓட்டுகள் தவறுதலாக வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அந்த ஓட்டுகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாங்களும் விஜய் ரசிகர்தான்! திமுக அமைச்சர் திடீர் பல்டி!! திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் டெபாசிட் காலி?!
மேலும், “அந்த தபால் ஓட்டுகளை சரியான தொகுதிக்கு அனுப்பி எண்ண வேண்டும். இரு வேட்பாளர்களும் சம ஓட்டுகள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கும்” என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. தபால் ஓட்டுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏ பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், “தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தது. இருப்பினும், தபால் ஓட்டுகள் தொடர்பாக திமுக வேட்பாளர் அளித்த புகாருக்கு உரிய விளக்கம் ஏன் அளிக்கப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரு ஓட்டு வித்தியாசம் என்றாலும் தேர்தல் கமிஷன் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது வரை உயர் நீதிமன்றம் தவெக வேட்பாளருக்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனினும், வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், சீனிவாச சேதுபதி இன்று எம்எல்ஏவாக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு ஓட்டு வெற்றி தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. தேர்தல் நடைமுறையில் ஏற்படும் சிறு பிழைகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!