பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களையும் ராமதாஸ் நீக்கினார். இதனால் பாமக இரண்டாக உடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 36 ஆண்டுகள் ஆகிறது, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக பாமக வர வேண்டும், 2016ம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று துவங்கினோம். பிரச்சாரம் வெற்றி பெற்றது. ஆனால் நாம் வெற்றி பெற முடியவில்லை, 45 நாட்களில் நாம் நடத்திய மாநாட்டை பார்த்து ஆளும் கட்சியே பயந்து விட்டது. இன்றைய தமிழ்நாட்டின் அரசியலில் நம்மை விட்டால் வேறு யாரும் கிடையாது. கட்சிக்கு கொள்கை வழிகாட்டி ஐயா ராமதாஸ். அவர் தான் நமது குலசாமி. சமூகநீதி உள்ளிட்ட அவரது வழியைப் பின்பற்றி வெற்றி பெறுவோம். கட்சியின் தலைவராக நான் செயல்படுவேன். என்னால் இப்போது சுதந்திரமாக செயல்பட முடிகிறது. நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: மாறியது பாமக அலுவலக முகவரி.. முழுவீச்சில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்..!

மேலும் வருகின்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் இருக்கிறது. “ரொம்ப முக்கியமான கட்டத்தில், முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். எனவே, இதை மனதில் வையுங்கள். கட்சிக்குள் ஏதோ சில குழப்பங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அவையெல்லாம் தற்காலிகமான குழப்பங்கள். எல்லாமே சரியாகிவிடும். சரிசெய்து விடுவோம். சரிப்படுத்திக் கொள்வேன். நம்முடைய இலக்கு, பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும். சமுதாயங்களுக்கு சமூக நீதி வேண்டும். சமூக நீதி நமது உயிர் மூச்சு கொள்கை. சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் சாதிவாரிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இன்னும் மூன்று வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய நோக்கம், லட்சியம் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான். இன்னும் எத்தனையோ போராட்டங்கள் செய்ய நாம் தயாராக இருக்கிறோம். நான் எவ்வளவோ பதவிகள், பொறுப்புகளை எல்லாம் பார்த்துவிட்டேன். எனவே, என் மனதளவில் நான் என்னை ஒரு தலைவராக பார்க்கவில்லை. உங்களைப் போல நானும் ஒரு அடிமட்டத் தொண்டன்தான். உங்களுடைய தலைமைத் தொண்டனாக நான் இருக்கிறேன். நான் வகிக்கின்ற பொறுப்புகளை முடிவு செய்பவர்கள் நீங்கள்தான். வேறு யாரும் அதை முடிவு செய்ய முடியாது. மனதில் நிறைய இருக்கிறது பேச முடியவில்லை.

சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்தைக் கடைபிடித்து, பாமகவை அடுத்தக்கட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். உடனடி இலக்கு நமது அமைப்பை இன்னும் பலமாக பலப்படுத்தி வருகின்ற தேர்தலில் நம் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். அடுத்தக்கட்டம் நம்முடைய ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
மேலும் ராமதாஸால் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன கடிதம் வழங்கி அந்த பதவியிலேயே தொடர்வார் என்றும் மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்தில் சென்று புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு பின்னால் பாஜக? நயினார் நாகேந்திரன் பதில்!