அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பாக முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதி, சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ராமர் கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்து பிரதமர் மோடி அறிந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ள இருவரும், பக்தர்கள் தங்களின் கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் நன்கொடையாக வழங்கிய நிலையில், தற்போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ராமர் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் வெளிப்படையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!

இந்த முறைகேடு தொடர்பாக சுயாதீன அமைப்பு மூலம் முழுமையான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், ராமர் கோயில் அறக்கட்டளையின் அனைத்து வரவு-செலவு கணக்குகளும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், யார் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு அல்லது ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. இதனால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!