முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்?. சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர் .பி உதயகுமார் கடும் தாக்கு
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம்.
ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர் விஜய்திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் சைலண்டாக நியமித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!
தற்போது கோயில் அறங்காவலர் நியமனகுழுவில் உறுப்பினராக முதல்வர் விஜயின் கோர்ட் தயாரிப்பாளர் கேரளாவை பூர்விமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் , கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைப்போல முதலமைச்சரின் தனி செயலாளராக முதல்வர் விஜய் நடித்த லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் பட ஒழிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்
முதல்வரின் அன்புக்குரியவரான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இதேபோல முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அண்ணி திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம்.
இதில் ஜனநாயகன் பட இயக்குனர் வினோத் ஜனநாயகம் படத்தை விஜய்யை வைத்து இயக்குகின்ற போது 6 மாதத்திற்கு மேல் அவருடன் நெருங்கி பழக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த எங்களுக்கே விஜய் மக்களுக்கு நல்லது செய்வாரா என்று நம்பிக்கை ஏற்படவில்லை.
ஒரு முறை கூட விஜய்யை நேரில் சந்திக்காமல், பார்க்காமல் திரையில் மட்டுமே பார்க்க முடிந்த மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்று நம்பியது வியப்பாகத்தான் இருக்கிறது, என்பதோடு மட்டுமல்லாமல் அவர் பக்கத்தில் இருக்கின்ற எங்களுக்கே தெரியாதது மக்களுக்கு எப்படி தெரிந்தது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் .
எது எப்படியோ இப்போது தமிழகத்தின் முதல்வராக மக்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்ற முதல்வர் விஜய் பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என்று உரக்க கொள்கை முழக்கம் விடுவதற்கும், தற்போதைய அரசு பொறுப்புகளுக்கான நியமங்களுக்கும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது என்பதுதான் மக்களின் மனதிலேயே ஏற்பட்டிருக்கின்ற கவலை.
இது இப்படித்தான் செல்லுமோ ஏனென்றால் முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் ,மற்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்களாக? இன்றைக்கு த.வெக அரசு பிரித்துப் பார்ப்பது அதன்படி அரசு பொறுப்புகளை நியமனம் செய்வது ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? இது தான் ஜனநாயகமா ? முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய சமூகத்திலே பொய்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒரு பொய்யை சமாளிக்கவும் மற்றொரு பொய்யை கூறவும் தகவல் தொழில்நுட்ப வார் ரூம்கள் இப்போது வந்து விட்டன. இந்த வார் ரூம்களில் பொய்கள் கட்டமைக்கப்பட்டு, மாய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு அரக்க குணம் உள்ளவர்கள் எல்லாம் ஆண்டவன் போல் சித்தரிக்கப்படுகிறார்கள்.
அப்படித்தான் அரக்கப் குணம் கொண்டிருக்கிற விஜய் அவர்களை ஆண்டவன் போல் வார் ரூம்கள் மூலமாக சித்தரித்த காரணத்தினால் தேர்தல் போர்க்களத்திலே உண்மையை தோற்கடித்து விட்டது. ஒருவன் பொய் சொல்லி ஜெயித்து விட்டான் என்றால் எதிர் தரப்பில் உண்மையைச் சொல்லி ஜெயிக்க முடியாது.
நான் சொல்லவில்லை ஜனநாயக படம் வெளியிட்டதை ஒட்டி அந்த ஜனநாயகன்படத்தை இயக்கிய வினோத் விஜய்யுடன் நட்பின் அனுபவத்திலே உண்டான கருத்துக்களை வெட்ட வெளிச்சமாக்கி விவரித்து சொல்லியிருக்கிறார்கள் அதுவே இதற்கு சாட்சியாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.
ஆகவே இன்றைக்கு வார் ரூம்கள் பொய்கள் கட்டமைத்து தேர்தல் களத்திலே தற்காலிக வெற்றிவாகை சூடி வருகிறது அதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசின் பொய்களை எதிர்த்து உண்மையைச் சொல்லி வெல்ல முடியாமல் உண்மைக்கும் சத்தியத்திற்கும் தற்காலிகமாக தோல்விதான் கிடைத்து வருகிறது .
உண்மை தமிழ் சமூகம், உணர்வுள்ள தமிழ் சமூகம், ஆற்றல் வாய்ந்த தமிழ் சமூகம், அறிவார்ந்த தமிழ் சமூகம், பண்பாடும் நாகரிகமும் தனக்கே சொந்தமான இந்த தமிழ் சமூகம் விழித்தெழும் நாள் தொலைவிலே இல்லை, சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதுதான் காலம் தருகின்ற தீர்ப்பு. அந்த தீர்ப்பு வருவதை இந்த தமிழ் இனம் உண்மையை நிலைநாட்ட உண்மையை வெற்றி பெறச் செய்ய தொடர்ந்து போராடும் என கூறினார்.
இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!